கனியிடை ஏறிய சுளையும்
முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும்,
காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும்
தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும்,
தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
பொழிலிடை வண்டின் ஒலியும்
ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும்,
வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும்
பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவனேனும், தமிழும்
நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
பயிலுறும் அண்ணன் தம்பி,
அக்கம்
பக்கத்துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை
என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போல் பேசிடும் மனையாள்,
அன்பைப்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம்
தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்!
நீலச் சுடர்மணி வானம்
ஆங்கே
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம்
ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும்
நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர்
தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும்
பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு
கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!
உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்-